Wednesday, 16 May 2012

காளி பல்லாண்டு


கலைமகளே ! திருமகளே ! மலைமகளே ! காலைக் கதிரொளியே !
குலக்கொழுந்தே ! கொற்றவையே ! காளிஎனும் கலைக்கடலே கருணை ஈவாய் !
சிறந்தொளிசேர் செம்பூவும் பசுந்தழையும் சேர்ந்தனபோல் சிவமும் தாயும்
அறம் தழைக்க நேர்பாதி கலந்தகோல அழகினுக்கு ஆயிரம் பல்லாண்டு

விடிவறியா உயிர்கள் பால் வினைநீக்கி விழிநோக்கி அருளே செய்யும்
கடகமழும் மலர்க்கூந்தல் காளிகாம்பாள் கண்களிக்க அள்ளியுண்டே
அடிமுதலாய் அன்பர்தமை அணைந்தமையால் அழகுபுகழ் காமாட்சியானாய்
படிஎழுத ஒண்ணாத பாவாய் நின் பாங்கினுக்கு ஆயிரம் பல்லாண்டு

முல்லைமுதல் மக்களுயிர் அத்தனைக்கும் மூலத்தாய் நீயே அன்றோ !
எல்லையிலா காலவினை சிலந்தியாக எழுப்பிவிடும் துன்பப் பின்னல்
தொல்லையினுள் வீழுமுயர் துயர்துடைக்கத் தோகையுறு உமையுமாவாய்
அல்லலிலாப் பெருவாழ்வே ! அருமருந்தே ! அன்பினுக்கு ஆயிரம் பல்லாண்டு

படியறியோம்! நின்பாதத்தின் பங்கறியோம் ! பல்வேறு வினைகள் தம்மால்
இடிஇடிக்கும் கொடுஞ்செயல்கள் இழைத்தபோதும் இன்னுயிர்பால் கனிவு கண்டோம்!
படிவளரப் பொருளீந்து உணவூட்டி உலகுவளர்க்கும் உலகாத்தம்மையே!
அடிதொழுவோம் ! அடைக்கலம் காண் ! அறம்வளர்த்த அருளினுக்கு ஆயிரம் பல்லாண்டு.

வெற்றியினைச் செருக்கோடு விரும்புகின்றேன் விளையாட்டாய்த் தோல்வி தந்தே
பற்றுடைய ஆணவத்தின் முனைமழுங்கப் பனிமுறுவல் செய்த எந்தாய் !
வேற்றுருவக் கருங்கல்லாய் கிடந்த நெஞ்சை வெண்கமலப் பூவாய்த்தானும்
பொற்புருவாய் ! அருள் தந்தாய் ! பூங்கோதாய் ! புதுமைக்கு ஆயிரம் பல்லாண்டு.

கார்மேனிச்செங்கண் கதிர்மதியம் போல் முகத்தைக் காணா இருப்பேனோ?
பேர்பெரியாய் உனை வணங்கி வாழ்த்தி உண்மை உணர்ந்துய்த்தேன்
சீர் பெருகும் காளிகாம்பாள் அம்மே நின் சீரடிக்கே சிவமானேன்
ஏரார்ந்த கண்ணி ! ஏலவார் பூங்குழலி ! எளிமைக்கு ஆயிரம் பல்லாண்டு

சிரம் மூன்றும் திருவடியில் இருக்கக் கண்டேன் ! இச்சிறியேன் சிரம் வைத்தால் தப்பேதுண்டோ?
கரமலரால் கைநீட்டி அழைக்கும் தாயே ! நின் கருணைக்காயிரம் பல்லாண்டே
பேரருளே ! பஞ்சதசாட்சரத்தை நெஞ்சகத்தே பிரித்தறியா என்னைப்
பாரதனுள் கண்பாராய் ! பால்மொழியே ! பரிவினுக்கு ஆயிரம் பல்லாண்டு

உன்னடிமைப் பரவுதற்கு மண்ணகந்தான் ஒளிர்பூவை பூத்துப் போற்றும்
மின்னும் பெருஆழியோடு வானகமும் மின்முத்தால் நீரால் போற்றும்
தின்னவரு செந்தழலோ அகிற்புகையைத் தென்றலுடன் தூவிப்போற்றும்
பொன்னடியை எங்ஙனம் நான் போற்றிடுவேன் ? புகழினுக்கு ஆயிரம் பல்லாண்டு

மண்ணகத்தின் படிமைதனைச் சிற்பியர்கள் மான்புறவே சமைத்துத் தந்தார்
தன்னகத்தில் ஓவியர்கள் வரைந்துன்றன் மலரடியைத் தொழுது நின்றார்
என்னகத்தில் உள்மலரும் கவி இதழால் எழில்படியைத் தொட்டேன் எந்தம்
பண்ணகத்து தமிழேற்பாய் ! பாகு கனிமொழியே ! பரிவினுக்காயிரம் பல்லாண்டு

இருள் அகல முத்தங்கிச் சுடரழகினுக்குத் திருப்பல்லாண்டு !
பொருள் விரிக்கும் விழிகளோடு புதுமுறுவல் அழகினுக்குத் திருப்பல்லாண்டு !
மருள்அகற்றி முத்தேவியர் கலந்த முழு அழகினுக்குத் திருப்பல்லாண்டு !
அருள் பொழியும் காளி அன்னைக்குக் கூறுவோம் பல்லாண்டு பல்லாண்டு .

1 comment:

  1. ஜயா இதை எழுதியவர் யார்? இதில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

    ReplyDelete